மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு பகுதியில் நேற்று மாலை புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் வலிமையைப் பறைசாற்றும் விதமாகவும், எதிர்கால அரசியல் வியூகங்களை வகுக்கும் விதமாகவும் அமைந்த இந்த மாநாட்டில், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு தொண்டர்களிடையே எழுச்சியுரை ஆற்றினார். தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் கடந்த காலக் கூட்டணி அனுபவங்கள் குறித்து அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், “தமிழகத்தில் இனி அமையப் போகும் அடுத்த ஆட்சியில் புதிய தமிழகம் கட்சி ஒரு அங்கமாக, அதாவது அதிகாரப் பகிர்வில் இடம் பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் சமுதாயத்திற்கான எந்த மாற்றத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. அதற்காகச் சாதியை ஓர் அரசியல் சக்தியாக மாற்றினால் மட்டுமே நம்மால் வெற்றியை எட்ட முடியும். புதிய தமிழகம் எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அதுதான் உண்மையான வெற்றிக் கூட்டணியாக அமையும். வரும் 2026-ஆம் ஆண்டுத் தேர்தலில் நாங்கள் வெறும் வேட்பாளர்களாக மட்டுமில்லாமல், ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்போம்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும், அதிமுக கூட்டணியில் இருந்த கசப்பான அனுபவங்களை வெளிப்படுத்திய அவர், “கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆனால், தேர்தலின்போது அந்த கட்சியின் ஒரு மாவட்டச் செயலாளர் கூட எனக்காக ஓட்டு கேட்க வரவில்லை. அத்தகைய ஒரு துரோகமான சூழலிலும் நாங்கள் கட்சிக்காக உழைத்தோம். இனிவரும் காலங்களில் எங்களது பலத்தை உணர்ந்தவர்களுடனேயே கைகோர்ப்போம்” எனச் சாடினார். இந்த மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் மதுரை ரிங் ரோடு பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

















