திருநெல்வேலி : “தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடருமா ? இரண்டு சீட்டுகள் மட்டுமே கொடுத்தால் என்ன ஆகும் ?” என தமிழ்நாடு பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திருமால் நகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கிய அரசியல் கருத்துகளை பகிர்ந்தார்.
“மத்திய அரசு யாரையும் ஏமாற்றவில்லை. மத்திய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, தமிழை முன்னிறுத்தி தமிழக அரசு அரசியல் லாபம் எடுக்கிறது. தமிழுக்காக உண்மையில் வாழும் ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி,” என்றார் நயினார்.
அதே நேரத்தில், தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து பேசும்போது,
“திருமாவளவன் ‘நாங்கள் தொடருவோம்’ என்கிறார். ஆனால், அப்படி சொல்வதிலேயே ஏதோ குழப்பம் இருக்கிறது. தி.மு.க. இரண்டு சீட்டு கொடுத்தால், விடுதலைச் சிறுத்தைகள் தொடருமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
தற்போது பல கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வரும் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
“இப்போது ஆளுங்கட்சி மக்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை விளக்கியே வாக்கு கேட்க வேண்டும். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது புலி வருது, புலி வருது என சொல்லும் கதையைப் போல் இருக்கிறது,” என்றும் நயினார் விமர்சித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் நடைபெற்ற மத்திய அரசின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருவதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.