ஈரோட்டில் தேசிய மஞ்சள் வாரிய மண்டல அலுவலகம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகம்

தமிழகத்தின் ‘மஞ்சள் மாநகரம்’ என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், செம்மாபாளையத்தில் உள்ள மஞ்சள் வணிக வளாகத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது ஈரோடு மாவட்ட மஞ்சள் விவசாயிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரை நேரில் சந்தித்து, இப்பகுதி விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். குறிப்பாக, தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்பட்டுள்ளதைப் போல, தென்னிந்தியாவின் முக்கிய உற்பத்தி மையமான ஈரோட்டில் அதன் மண்டல அலுவலகத்தை அமைக்க வேண்டும், மஞ்சள் சேமிப்பிற்காக நவீனக் குளிர்சாதனக் கிடங்குகளை உருவாக்க வேண்டும், மின்கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மஞ்சள் அறுவடை இயந்திரங்களில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

விவசாயிகளின் கோரிக்கைகளை மிகுந்த கனிவுடன் கேட்டறிந்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மேடையில் பேசுகையில் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். “நான் இங்கு ஒரு அமைச்சராக வரவில்லை, உங்கள் குடும்பத்தில் ஒரு உறவினராகவே வந்துள்ளேன். விவசாயிகளுக்குச் சேவை செய்வதை நான் இறைவனுக்குச் செய்யும் சேவையாகக் கருதுகிறேன். உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவே தில்லியில் இருந்து உயரதிகாரிகள் குழுவுடன் நேரில் வந்துள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், ஈரோட்டில் உலகத்தரம் வாய்ந்த மஞ்சள் பரிசோதனை ஆய்வகம் (Quality Testing Lab) அமைக்கப்படும் என்றும், தேசிய மஞ்சள் வாரியத்தின் தென் மண்டல அலுவலகம் ஈரோட்டிலேயே அமையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மூலம் மேம்படுத்தப்பட்ட மஞ்சள் அறுவடை இயந்திரங்களை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணிகளைத் தானே நேரடியாகக் கண்காணிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், “இந்தியா முழுவதும் இணையவழியில் (Online) மஞ்சள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதே வேளையில், சட்டவிரோத மஞ்சள் விற்பனை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்தார். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 900 கோடி ரூபாய் நிதியைக் கொண்டு விரிவுபடுத்தப்பட்ட குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் புதிய ரக மஞ்சள் விதைகளை விநியோகிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, அருகில் உள்ள விளைநிலங்களுக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர், அங்கு பயிரிடப்பட்டுள்ள மஞ்சளின் தரத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்வாதாரக் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே. சரஸ்வதி மற்றும் மத்திய வேளாண் துறை உயர் அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சரின் இந்த நேரடி வருகையும், அறிவிப்புகளும் ஈரோடு மாவட்ட மஞ்சள் விவசாயிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version