மலேசியா சென்ற தாய் மாயம்… 8 ஆண்டுகள் காத்திருக்கிறேன்..!

மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற தனது தாய் கடந்த 8 ஆண்டுகளாகியும் வீடு திரும்பாததால், அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் ஞான சௌந்தர்யா உருக்கமான விண்ணப்பம் அளித்துள்ளார்.

அவரது தாய் சுடலி (46), ஒரு வருட விசா என்று கூறி அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும், அவர் இரண்டு மாத சுற்றுலா விசா (Tourist Visa) மூலம் அனுப்பப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல் ஞான சௌந்தர்யாவின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது.


ஞான சௌந்தர்யா தனது குடும்பம் கடும் பணக்கஷ்டத்தில் இருந்ததாகவும், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்ததாகவும் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால், தனது தாய் சுடலி மலேசியாவுக்கு வீட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்தார். இவரை, பக்கத்து வீட்டில் வசிக்கும் விஸ்வநாத செல்வி மற்றும் அவரது மகன் செல்வராஜ் ஆகியோர் மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று சுடலி மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 11, 2017 அன்று மலேசியாவில் உள்ள “O Winer” என்பவரிடமிருந்து சுடலியின் தந்தை கணக்கிற்கு ₹30,000 சம்பளம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த நாளே (டிசம்பர் 12, 2017) செல்வராஜ் வீட்டிற்கு வந்து, “உங்கள் அம்மா மலேசியாவில் வீட்டில் இல்லை, அங்கிருந்து வேறு எங்கோ சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார். அன்று முதல் இன்றுவரை, சுமார் எட்டரை ஆண்டுகளாகியும் சுடலி குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று ஞான சௌந்தர்யா தனது மனுவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஞான சௌந்தர்யா தனது அம்மாவின் பாஸ்போர்ட் எண் (J8811784) மூலம் சரிபார்த்தபோது, செல்வராஜ் ஒரு வருட விசா என்று கூறி அனுப்பி வைத்திருந்தாலும், அது இரண்டு மாத சுற்றுலா விசா என்று தற்போது தெரியவந்துள்ளது. இதனால் தனது தாய் எப்படி இருக்கிறார் என்றே தெரியவில்லை என ஞான சௌந்தர்யா கவலை தெரிவித்துள்ளார்.


தனது தாயைக் கண்டுபிடிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களில் பலமுறை புகார் அளித்திருப்பதாகவும், ஆனால் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் ஞான சௌந்தர்யா கூறியுள்ளார். ஞான சௌந்தர்யா, தனது தாயைக் கண்டுபிடித்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது தாயை மலேசியாவுக்கு அனுப்பிய செல்வராஜின் தொலைபேசி எண்: 8508413507, மேலும் சுடலி வேலைக்குச் சென்றதாகக் கூறப்படும் மலேசியாவில் உள்ள சேதுராமன் என்பவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண் (+60 12-2266161) ஆகிய விவரங்களையும் தனது விண்ணப்பத்தில் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, மாயமான சுடலியைக் கண்டுபிடித்துத் தரும் என அவரது குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Exit mobile version