பின்னலாடை நகரமான திருப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான நிட்-டெக் (KNIT-TECH) இயந்திரக் கண்காட்சியில், ஜவுளித்துறையின் ஜாம்பவான்கள் மற்றும் தொழில்முனைவோரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக டோனி என்ஜினியரிங் கம்பெனி (Tony Engineering Company) தனது புதிய படைப்புகளை அரங்கேற்றியுள்ளது. கண்காட்சியின் அரங்கு எண் ‘ஏ–14’-ல் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பக் கூடத்தைத் திருப்பூர் மாநகர துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டோனி என்ஜினியரிங் கம்பெனியின் நிறுவனர் டோனி அனைவரையும் வரவேற்றார். விழாவில் கே.பி.எம். பிராசசிங் மில்ஸ் நிறுவனர் சுகேஷ், ஏஇபிசி தலைவர் ஏ. சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியம், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி மற்றும் டாட் தலைவர் காந்திராஜன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு, ஜவுளித்துறையில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள இத்தகைய உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் அவசியம் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.
கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இயந்திரங்களின் சிறப்பம்சங்கள் குறித்து நிறுவனத்தின் இயக்குநர்கள் நேசன் மற்றும் ஏக்னல் ஆகியோர் விரிவாக விளக்கமளித்தனர். அவர்கள் கூறுகையில், “எங்களது ‘சின்டெக் எல்.டி.’ (Sintech LT) இயந்திரம், பாலியெஸ்டர், லைக்ரா மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட செயற்கை இழை துணிகள் என அனைத்து வகையான துணிகளையும் தரத்தைப் பாதுகாத்துச் சாயமிட உதவும். அதேபோல், ‘ஈகோ டெக் +3.0’ (Eco Tech +3.0) என்ற சாப்ட்-புளோ டையிங் இயந்திரம், 168 மி.மீ நாசில் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது 1:3.5 என்ற மிகக்குறைந்த லிக்கர் ரேஷியோவில் (Liquor Ratio) செயல்படுவதால், தண்ணீர் மற்றும் மின்சாரத் தேவையைக் குறைத்து அதிக உற்பத்தியை வழங்குகிறது,” எனத் தெரிவித்தனர்.
திருப்பூர் சாய ஆலைகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் தண்ணீர் மேலாண்மை மற்றும் அதிக ஜி.எஸ்.எம் துணிகளைச் சாயமிடும் தொழில்நுட்பத்திற்கு இந்த இயந்திரங்கள் ஒரு சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகின்றன. தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் இயக்கப்படும் இந்த இயந்திரங்களைப் பார்வையிடத் தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான சாய ஆலை உரிமையாளர்கள் வருகை தந்து வருகின்றனர்.

















