சென்னை :
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், மாநில அரசையும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோவில் அவர் தெரிவித்ததாவது :
“திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர். விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் இந்த ஆட்சியில் நம்பிக்கையை இழந்துள்ளனர். ஆனால் ஸ்டாலின் குடும்பமே திருப்தியாக இருக்கிறது. திமுக கட்சி தேர்தலுக்கு முன் கூறிய 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை,” எனக் கூறினார்.
மேலும், “ஸ்டாலின் அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. மக்கள் இப்போது இந்த அரசை மாற்றத் தயார் நிலையில் உள்ளனர். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு மாநிலமெங்கும் மக்களிடையே பெரும் ஆதரவு காணப்படுகிறது,” என தெரிவித்தார்.
பாஜக தலைமையகம் தெளிவாக அறிவித்துள்ளதாகவும், “டெல்லிக்கு தலைமை மோடிஜி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடியார்” என்பதே தற்போதைய நிலை எனவும் கூறினார். அதிமுகவை பிரிக்க முயற்சி செய்பவர்கள் கருத்து சுதந்திரத்தைக் காரணமாகச் சொல்ல முடியாது என்றும், உண்மையான தலைமையே எடப்பாடியார்தான் என்றும் வலியுறுத்தினார்.
“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்னிறுத்தி, திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அவர் தான் ராமன் போல் திமுக என்ற ராவணனை வீழ்த்த உள்ளார். அதற்கான காலம் வந்துவிட்டது,” என அவர் உரையாற்றினார்.
இவ்வாறு கூறி, அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் அனைவரும் தெளிவாக இருக்கின்றனர் என்றும், எந்தவிதமான குழப்பமும் இல்லையென்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.