வால்பாறையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் பிறந்தநாள் விழா – எஸ்டேட் தொழிலாளர்களுக்கு அள்ளி வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள்!

கோவை மாவட்டம், தேயிலைத் தோட்டங்களின் சொர்க்கமான வால்பாறை பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. கட்சியின் நிறுவனர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு, வால்பாறை நகரம் மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மிக விமரிசையாக நடைபெற்றன. வால்பாறை நகரச் செயலாளர் மயில்கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, தேர்தல் பொறுப்பாளர் டி.எல்.சிங் முன்னிலை வகித்துச் சிறப்பித்தார்.

வால்பாறையின் முக்கியப் பகுதிகளான மாலைப் பகுதி, கக்கன் காலனி, சக்தி எஸ்டேட், வேவர்லி மற்றும் கவர்கல் வாட்டர்பால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அத்தியாவசியப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிமுக எடுத்து வரும் தொடர் முயற்சிகள் குறித்தும், எடப்பாடியாரின் தலைமையிலான கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகளிடையே விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வால்பாறையின் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, தொண்டர்கள் திரளாகக் கூடி “இரட்டை இலை” முழக்கங்களை எழுப்பியது அப்பகுதியை அதிரச் செய்தது.

இந்நிகழ்வில் நகர துணைச் செயலாளர் பொன் கணேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆர்.ஆர்.பெருமாள், நகர வர்த்தக அணி செயலாளர் ஆர்.சண்முகவேலு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும், வால்பாறை நகர பாஜக தலைவர் செந்தில்குமார், நகர இளைஞரணி செயலாளர்கள் ஆர்.ஆர்.சசிகுமார், நகர பொருளாளர் பழனிசாமி, நகர பொறுப்பாளர்கள் ஸ்ரீராம், பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர்கள் எஸ்.கே.எஸ். பாலு, எம்.ஆர்.எஸ்.மோகன், முன்னாள் வார்டு செயலாளர் . சௌந்தரராஜன், பாசறை இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், 2-வது வார்டு செயலாளர் கண்ணன், பூத் செயலாளர்கள் சுரேஷ், மகேஷ்குமார், பிரசாந்த், பூத் தலைவர் அன்பரசன், தமிழரசன் உள்ளிட்ட ஏராளமான சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர். தேர்தல் பணிகளுக்கான முன்னோட்டமாக அமைந்த இந்த விழாவானது, வால்பாறை மலைப்பகுதியில் அதிமுகவின் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version