மயிலாடுதுறை அருகே கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி பிரமோற்சவ விழாவில் தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் தன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன ஐதீக திருவிழா புராண வரலாறுபடி நடைபெற்றது. , ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை உடனாகிய அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சிவ பெருமான் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு மோம நிலைக்கு சென்றதால் உலகம் வெப்பமாகி தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள், முருகப் பெருமானிடம் முறையிட்டனர். ஆனால் முருகனோ தந்தையின் தவத்தை கலைக்க என்னால் முடியாது, என சொல்ல, மன்மதனிடம் சென்று சிவனின் தவத்தை கலைக்க கோரியதன் பேரில் சிவனின் தவத்தை கலைக்க மன்மதன் சென்றார். சிவனின் மீது தன் மன்மத அம்பை எய்து சிவனின் தவத்தை கலைத்தார். கடும் கோபம் கொண்ட சிவன் தன் தவத்தை கலைத்த மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். இந்த ஐதீக நிகழ்வு மாசி மாத பிரமோற்சவ விழாவில் சிவன் காமதகனமூர்த்தியாக எழுந்தருளி சம்ஹாரம் செய்யும் ஐதீக திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழா கடந்த 21ஆம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஐந்தாம் நாள் விழாவாக இன்று மன்மதனை சிவன் தன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன ஐதீக திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சிவன் காமதகனமூர்த்தியாக தேரடியில் எழுந்தருளினார். மலர்க்கணை தொடுத்து தவத்தை கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண்னால் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மகாதீபாரதனை நடைபெற்று பஞ்சமூர்த்திகள் மன்மதனுடன் காமதகனமூர்தியாக சிவன் திருவீதியுலா காட்சி தந்தார். வீடுகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை, தீபாரதனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் தருமபுரம் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.













