கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவில்களில் மண்டல பூஜை பஞ்சவாத்தியம், பஜனை முழங்க வீதி உலா

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி கோவில்களில், கார்த்திகை மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 41 நாட்கள் மண்டல கால பூஜைகள் நேற்று மிகச் சிறப்பாக நிறைவுற்றன. கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டைபாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி புனித நீர் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா வந்தபோது, பக்தர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷங்களை முழங்கி வழிபட்டனர். விழாவின் நிறைவாக ஐயப்ப பஜனை பாடல்கள் பாடப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், பெரியாக்கவுண்டனூர் ஐயப்ப சுவாமி கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜையில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து பஜனை பாடல்களைப் பாடியதுடன், சபரிமலை முறைப்படி ‘படி பூஜை’ நடத்தி வழிபட்டனர். இதில் பெரியாக்கவுண்டனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரம்மாண்டமான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கேரளா பாணியிலான பஞ்ச வாத்தியம் முழங்க, கண்கவர் மலர் அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி மற்றும் பரிகார மூர்த்திகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாகத் திருவீதி உலா வந்தனர். வானவேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை மிகவும் விசேஷமாகக் கருதப்பட்டது. சபரிமலை முன்னாள் மேல் சாந்தியும், கோவில் தந்திரியுமான சசி நம்பூதிரி தலைமையில், அர்ச்சகர் மகேஸ்வர பிரபு ஜோதி சுவாமிகள் முன்னிலையில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்றன. சபரிமலை ஐயப்பன் கோவிலின் நேரடித் தொடர்புள்ள மேல் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் பங்கேற்றது தங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்ததாகப் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மண்டல பூஜை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் தங்களது இருமுடிப் பயணத்தைச் சபரிமலை நோக்கித் தொடங்கி உள்ளனர். ஒட்டுமொத்தப் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவுப் பகுதியே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷத்தால் ஆன்மீக மணம் கமழ்ந்து காணப்பட்டது.

Exit mobile version