13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை..!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2019 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமியின் மாமன்மகன் பார்த்தசாரதி(26) என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து,

கடந்த 23-06-2019 அன்றும் அதனை தொடர்ந்து பல நாட்கள் பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் அந்த சிறுமி கருவுற்றுள்ளார் அதனை அறியாமலேயே சிறுமி தொடர்ந்து பள்ளிக்கு சென்ற நிலையில் கடந்த
09-11-2019 ஆம் தேதி பள்ளியில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

பள்ளியின் ஆசிரியர்கள் நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமியை அழைத்து சென்று பரிசோதித்த போது சிறுமி கற்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை
யில் அவரது அம்மா அழைத்து வந்து பரிசோதித்தபோது பாதிக்கப்பட்ட சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்த போது தனது தாய் மாமன் மகன் பார்த்தசாரதி தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என நடந்த சம்பவங்களை கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் பார்த்தசாரதியின் அப்பா கருணாநிதியும் வெண்பாவூரில் உள்ள அவர்களின் குலதெய்வ கோயிலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், பார்த்தசாரதிக்கும் குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தையின் உயிரியல் தந்தை பார்த்தசாரதி தான் என்பது மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி இந்திராணி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக பலமுறை பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக பார்த்தசாரதிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் ரூபாய் ஐம்பதாயிரம் அபராதம் விதித்தும்,

அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டதோடு பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்கு 20 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்ததோடு அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை குழந்தை திருமணம் செய்த குற்றத்திலிருந்து பார்த்தசாரதியையும் குழந்தை திருமணம் நடத்தி வைத்த குற்றச்சாட்டுகளிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பார்த்தசாரதியின் பெற்றோரையும் அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பார்த்தசாரதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version