தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சுகுணா சத்யன் திமுகவிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) தன்னை இணைத்துக் கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் ‘அழகிரி பேரவை’ தலைவராகப் பணியாற்றி வந்த இவர், சென்னைக்கு நேரில் சென்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் புகழ்பெற்ற ‘அருக்காணி ஓட்டல்’ உரிமையாளரான சுகுணா சத்யன், அதிமுகவில் இணைந்தது ஈரோடு மாவட்ட திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் முறைப்படி கட்சியில் இணைந்த பிறகு, பெருந்துறைக்குத் திரும்பிய சுகுணா சத்யன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநிலப் பேரவை இணைச் செயலாளருமான ஜே.கே. (எ) ஜெயக்குமார் அவர்களை நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பின் போது, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் வேட்டுவம்பாளையம் அருணாச்சலம் உடனிருந்தார். மு.க.அழகிரியின் செல்வாக்கு மிகுந்த ஆதரவாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட சுகுணா சத்யன், தற்போது எடப்பாடியாரின் தலைமையிலான அதிமுகவில் இணைந்திருப்பது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவின் கரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவை நோக்கி அணிவகுத்து வரும் நிலையில், தென்மாவட்ட அரசியல் ஆளுமையான அழகிரியின் ஆதரவாளர் கொங்கு மண்டலத்தில் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. சுகுணா சத்யனின் வருகையைத் தொடர்ந்து, பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். “தகுதியானவர்களை அங்கீகரிக்கும் எடப்பாடியாரின் தலைமையின் கீழ் பணியாற்றுவதே சிறந்தது” எனத் தனது ஆதரவாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
