பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், ‘பூபதி திருநாள்’ என்று அழைக்கப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான எட்டாம் திருநாளான வெள்ளிக்கிழமை, நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அன்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, உள் திருவீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபத்தைச் சென்றடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். மின்னொளியில் ஜொலித்த தங்கக் குதிரையில் அமர்ந்து, உள் திருவீதிகளில் சீறிப்பாய்ந்து வையாளி கண்டருளிய காட்சி பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. திரளான பக்தர்கள் ‘ரெங்கா ரெங்கா’ என முழக்கமிட்டு நம்பெருமாளைச் தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் மீண்டும் கண்ணாடி அறைக்குச் சென்றடைந்தார். இரவு 9 மணிக்கு சின்ன பெருமாள் சயனம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வான தைத்தேரோட்டம் சனிக்கிழமை (ஜனவரி 31) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காகப் பிரம்மாண்டமான தேர் தயார் நிலையில் உள்ள நிலையில், கோவில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளைச் சிறப்புடன் செய்து வருகின்றனர்.

















