அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு – விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றம்

சென்னை : தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது நில மோசடி குற்றச்சாட்டுடன் தொடரப்பட்டுள்ள வழக்கு, விசாரணைக்காக வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் சிட்கோ நிறுவனம் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்திருந்த நிலத்தை, சென்னை மாநகர மேயராக இருந்த போது, மா.சுப்பிரமணியன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலியான ஆவணங்கள் மூலம் தனது மனைவி பெயருக்கு மாற்றியதாக சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது, போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, எம்பி, எல்எல்ஏவின் குற்ற வழக்குகளுக்கான சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. வழக்கை ரத்து செய்ய மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் தேதி மே 23 என்று முந்தைய நீதிபதி பிரபாகரன் அறிவித்திருந்தார். ஆனால், வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதி வேங்கடவரதனிடம் மாற்றப்பட்டதால், அம்மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்பே திட்டமிட்டிருந்த அமெரிக்கப் பயணத்தில் இருப்பதால், வழக்கு தள்ளிவைக்கக் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக உத்தரவிட்டார்.

Exit mobile version