மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அரசு நிலங்கள் மற்றும் பொது பயன்பாட்டு இடங்கள் முறைகேடாக ஆக்கிரமிக்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் அண்ணாசாலை முதலியார்புரம் 2-வது தெருவின் நுழைவுவாயிலில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியை, கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் இரவோடு இரவாக அகற்றியுள்ளனர். குறுகிய வளைவைக் கொண்ட அந்தப் பகுதியில் மண் அள்ளும் இயந்திரத்தைக் கொண்டு நிலத்தைச் சமப்படுத்தி, சட்டவிரோதமாகப் புதிய கடை ஒன்றையும் ஆக்கிரமிப்பாளர்கள் அமைத்துள்ளனர். ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில், இந்த ஆக்கிரமிப்புக் கடையால் வாகனப் போக்குவரத்து மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதேபோன்றதொரு அதிர்ச்சி தரும் சம்பவம் தெரசா நகர் பகுதியிலும் அரங்கேறியுள்ளது. அங்குப் பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்த நகராட்சி குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். காலையில் குடிநீர் தொட்டி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டிடத்திற்கான கம்பிகள் ஊன்றப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து மாலையில் அவை அகற்றப்பட்டன. ஆளுங்கட்சியினரின் பின்புலத்துடன் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடங்கள் திட்டமிட்டு கபளீகரம் செய்யப்பட்டு வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய ஆக்கிரமிப்புகளால் அரசு நிலங்கள் மாயமாவதுடன், எதிர்காலத்தில் சாலை விரிவாக்கம் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கும் முட்டுக்கட்டை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “முதலியார்புரம் 2-வது தெருவில் குப்பைத் தொட்டியை அகற்றி அமைக்கப்பட்ட கடைக்கு நகராட்சி தரப்பில் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. அதேபோல் தெரசா நகரில் குடிநீர் தொட்டி அகற்றப்பட்டுத் தனியார் கட்டுமானம் நடைபெறுவது குறித்துத் தகவல் கிடைத்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, சட்டவிரோதக் கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்படும்,” என்று உறுதியளித்தார். இருப்பினும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் இதில் நேரடியாகத் தலையிட்டு கொடைக்கானலின் இயற்கை எழிலையும் அரசு நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















