போலி ஆவணங்கள் வழியே நிலம் கைப்பற்றல் : மா.சுப்பிரமணியன் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை :
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் ஒதுக்கப்பட்ட நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலம், சிட்கோவின் சார்பில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில், மா.சுப்பிரமணியன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை தனது மனைவி காஞ்சனாவின் பெயரில் மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இதன்பேரில், போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவையின் கீழ் இருவரும் சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளாகும் வகையில் வழக்கில் பெயரிடப்பட்டனர்.

2019-ஆம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனை ரத்து செய்ய மா.சுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி சார்பில் மேல்முறை மனுத் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அது நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோடை விடுமுறையால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறாததால் குற்றச்சாட்டு நடைமுறையை தற்காலிகமாக தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதி, “மீண்டும் கால அவகாசம் வழங்க முடியாது” எனக் கூறி, ஜூலை 24ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்திலிருந்து உத்தரவு பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இல்லையெனில், குற்றச்சாட்டு நடைமுறை அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version