பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அண்ணாநகரை சேர்ந்த கெபிராஜ் ‘ஜூடோ’ என்ற தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வந்தவர். மேலும், கெருகம்பாக்கம் உட்பட சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல தனியார் பள்ளிகளில் பகுதி நேர பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். போட்டிக்காக மாணவியரை வெளி மாவட்டங்களுக்கு அழைத்து செல்லுவது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு, தன்னிடம் பயிற்சி பெற்ற 19 வயது மாணவியரை நாமக்கல் போட்டிக்காக அழைத்து சென்ற கெபிராஜ், போட்டி முடிந்து ஈரோடு ரயில் நிலையம் வருகை வழியில் காரில் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவி, 2021-ஆம் ஆண்டு அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கெபிராஜ் கைது செய்யப்பட்டு, விசாரணையில் பல மாணவியருக்கு பாலியல் தொந்தரவு செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர், வழக்கு சிபிசிஐடி (CBCID) போலீசுக்கு மாற்றப்பட்டு, 2022 மே 19-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை, சென்னை அல்லிக்குளம் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். பத்மா முன்னிலையில் நடைபெற்றது. குற்றவாளி என நிரூபணமான கெபிராஜுக்கு, 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.