ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தாக்கல் செய்த 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக — ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சம்பத்குமார் மற்றும் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக தோனி, 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை, தனி நீதிபதி முன்பு விசாரணை நடந்தது. அப்போது, “இந்த மனுவை ஏற்றுக்கொண்டால் பிரதான வழக்கு முடிவடைவது மேலும் நீளும்” எனக் கூறி, நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, தற்போது நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இரு தரப்பினரும் வாதம் முடித்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.