“It’s very wrong bro…” – விஜய் ஈரோடு வருகையை ஒட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சை

ஈரோடு:
கரூர் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் பிரச்சார களத்தில் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று ஈரோட்டில் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரையில் ஈடுபடுகிறார். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்விற்காக, அவர் சென்னையிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இதனிடையே, விஜய்யின் ஈரோடு வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சில போஸ்டர்கள், அரசியல் வட்டாரங்களில் மட்டுமின்றி பொதுமக்களிடையிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கரூர் சம்பவத்தின் பின்னணி

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மற்றும் நாமக்கல் பகுதிகளில் நடைபெற்ற அவரது பிரச்சார பயணம், எதிர்பாராத சோகச் சம்பவத்துடன் முடிவடைந்தது.

அன்றைய தினம் நாமக்கலில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விஜய் குறிப்பிட்ட நேரத்தைத் தவறி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட மேலாண்மை முறையாக நடைபெறவில்லை என்றும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் நெரிசல், பசி, தாகம் காரணமாக சோர்வடைந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

கரூரில் மதியம் 3 மணிக்கு விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், அவர் இரவு 7.50 மணியளவில்தான் வந்தடைந்ததாக கூறப்படுகிறது. காலை முதலே கூடியிருந்த மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால், சிலர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கட்டுப்பாடுகள் – மீண்டும் தொடங்கும் பிரச்சாரம்

இந்த சம்பவத்திற்கு பிறகு, விஜயின் பிரச்சாரங்களுக்கு போலீஸ் தரப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்து அனுமதிகளுடனும் இன்று ஈரோட்டில் அவர் பரப்புரையை மேற்கொள்கிறார்.

சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள்

இந்நிலையில், ஈரோடு நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சில போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
அந்த போஸ்டர்களில், “ஈரோடு வரைக்கும் வந்தீங்களே… கரூருக்கு போக மாட்டீங்களா?” “கரூருக்கு போகல… ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? It’s very wrong bro!” என ஆங்கிலம் – தமிழ்கலந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் யாரால் ஒட்டப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், கரூர் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த வாசகங்கள், விஜயின் அரசியல் பயணத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version