சென்னை :
மணல் மற்றும் கனிம வளக் கொள்ளை, பணமும் அரசியல் ஆதாரமும் கொண்டு மாபியா போன்று நடைபெறுவதாக கடுமையாக சாடிய சென்னை உயர் நீதிமன்றம், இத்தகைய சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் நேரடி பொறுப்பு எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக் கொள்ளை தொடர்பான வழக்கில், புவியியல் மற்றும் கனிம வளத் துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முன்பே உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, புவியியல் மற்றும் கனிம வளத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மணல் மற்றும் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தாண்டு மார்ச் 31க்குள் இந்தப் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2020 முதல் 2025 நவம்பர் வரை 1,439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டது கண்டறியப்பட்டு, 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், பதிவான வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் ஏன் அறிக்கையில் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும், ரூ.5 கோடி மதிப்பிலான கனிம வள கொள்ளை நடந்த வழக்கில் ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதால் என்ன பயன் கிடைக்கும் எனவும் விமர்சனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அரசியல் மற்றும் பண பலத்தின் துணையுடன் மணல் மற்றும் கனிம வளக் கொள்ளைக் கும்பல்கள் மாபியா போல் செயல்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இத்தகைய கொள்ளைகளை தடுக்க அதிகாரிகள் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுப்பது மாவட்ட கலெக்டர்களின் பிரதான பொறுப்பு என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்க தவறிய வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மணல் மற்றும் கனிம வள கொள்ளை குறித்து புகார் அளிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்றும், கொள்ளையை தடுக்கும் வகையில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் முடித்து வைத்தது.
















