இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், முக்கியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த முடிவுக்குப் பின்னால், பிசிசிஐ தேர்வுக் குழுவின் அழுத்தமே காரணம் என வதந்திகள் கிளம்பியிருந்தாலும், பிசிசிஐ அதைத் தள்ளுபடி செய்து, ரோகித் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை எடுத்ததாக விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை அவரால் இதுபற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அவர் தனது முடிவை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், விராட் கோலியின் அனுபவத்தை எதிர்வரும் வெளிநாட்டு தொடர்களில் இழக்க வேண்டாம் என்பதற்காக, பிசிசிஐ உயர் அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு, இந்த முடிவை மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெறவுள்ள சவாலான தொடர்கள் முன்னிட்டு, அவரது அனுபவம் அணிக்கு மிகமுக்கியம் என பிசிசிஐ கருதுகிறது.
2011-ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 9,230 ரன்கள் குவித்துள்ளார். இதில் 30 சதங்கள் அடைந்துள்ள அவர், தற்போது உள்ள இந்திய அணியில் மிக அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.