தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு முகமூடி கிழிந்துவிட்டது என்றும், ‘ஸ்டாலின் மாடல்’ அரசின் சாதனை, தமிழகத்தைக் ‘குற்றசம்பவங்களில் நம்பர் 1’ மாநிலமாக மாற்றியது தான் என்றும் சரமாரியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஊர் மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்த அரசு வழக்கறிஞரும், தி.மு.க. நிர்வாகியுமான முத்துக்குமாரசாமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு, உயிருக்கு பயந்து ஓடிய அவரைக் குற்றவாளிகள் வீதிகளில் ஓட ஓட விரட்டிச் சென்று படுகொலை செய்துவிட்டுத் தப்பி இருக்கிறார்கள். இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்தச் சம்பவம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கின் முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான அலங்கோலத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளது. குற்றசம்பவங்களில் NO.1 மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியது தான் இந்த ‘ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை’ என முதல்வர் விளம்பரப்படுத்த வேண்டியது தானே?” என்று sarcasm தொனியில் கேள்வி எழுப்பினார். “ரோட்டிலும் கொலை, கோர்ட்டிலும் கொலை; பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள், போலீஸ்காரர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படித் தமிழகத்தில் சிறுமி முதல் முதியோர் வரை, அரசு மருத்துவர் முதல் அரசு வழக்கறிஞர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்டுவிட்டு, எப்போது என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடன் மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய முதல்வருக்குக் கடும் கண்டனங்கள்,” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி அரசு வழக்கறிஞர் படுகொலை சம்பவம் குறித்து உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்பு நிறுத்தி, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
