மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உரப்பனூர், உச்சப்பட்டி, காந்திநகர் மற்றும் பொன்னையாபுரம் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தேர்தல் அறிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அறிவித்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் நேரடியாக விநியோகித்து அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய ஆர்.பி. உதயகுமார், கடந்த மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம், மதுரையின் சித்திரைத் திருவிழாவைப் போன்றதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சியை மாசி மாதத்திலேயே ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக அளவில் தூய்மையான கோயில்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருதைப் பெற்ற பெருமையை நினைவுகூர்ந்த அவர், இன்று திமுக ஆட்சியில் மதுரை மாநகரம் குப்பைகளின் நகரமாக மாறித் தலைகுனிந்து நிற்பதாகச் சாடினார். ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.1,000 கோடியில் பறக்கும் பாலம் என மதுரையை வளர்ச்சிப் பாதையில் எடப்பாடியார் கொண்டு சென்ற நிலையில், இன்றைய திமுக அரசு மாநகராட்சியை ஊழல் கூடாரமாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழக வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுத் தந்தவர் எடப்பாடியார் என்றும், எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்குக் கொண்டு வந்த பெருமை அதிமுகவையே சாரும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். ஆனால், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட உருவாக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக ஆட்சி வளர்ச்சியின் அடையாளமாகவும், திமுக ஆட்சி வீழ்ச்சியின் அடையாளமாகவும் இருப்பதாகக் கூறினார். தமிழகம் இன்று ரூ.10.5 லட்சம் கோடி கடன் சுமையுடன் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பதாகவும், மின்கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வால் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த அவல நிலையிலிருந்து மக்களைக் காக்கவே எடப்பாடியார் 186 தொகுதிகளில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும், வரும் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் மக்களாட்சியை மலரச் செய்வது உறுதி என்றும் அவர் முழங்கினார்.
