இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் போர் காலத் தலைவர் அலி ஷாத்மானி உயிரிழப்பு !

யார் இந்த அலி ஷாத்மானி ?

தெஹ்ரான்: அணு ஆயுதத் திட்டங்களை முன்னிறுத்துவதாக கூறப்படும் ஈரானுக்கு எதிராக, இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ எனும் குறியீட்டுப் பெயரில், ஜூன் 13 முதல் தொடங்கிய இந்த தாக்குதல்களின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது.

இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் விளைவாக, மத்திய கிழக்கு மண்டலத்தில் போர்மூட்டும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவத் தளபதியான அலி ஷாத்மானி உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் (IDF) அறிவித்துள்ளது. அவர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமான நபராக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலி ஷாத்மானி யார் ?

அலி ஷாத்மானி, ஈரானின் உயர் இராணுவத் தளபதியாக இருந்தவர். மேலும், போர் காலத் தலைமையகத்துக்கு தலைமை வகித்ததால், அவர் “போர் காலத் தலைமைத் தளபதி” என அழைக்கப்பட்டார்.

இவர், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய ஆயுதப்படைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துத் தலைமை தாங்கியிருந்ததாக IDF தெரிவித்துள்ளது.

அவரது முன்னோடி அலா அலி ரஷீத் கொல்லப்பட்ட பின்னர், ஷாத்மானி அதே பதவிக்கு நியமிக்கப்பட்டார். முன்னதாக, அவர் ‘கத்தாம் அல்-அன்பியா’ எனப்படும் ஈரானின் அவசர கட்டளை மையத்தில் துணைத் தளபதியாகவும், பொதுப் பணியாளர் இயக்குநரக தலைவராகவும் செயல்பட்டிருந்தார்.

பாதுகாப்பு எச்சரிக்கைகள்

போர்மூட்டும் சூழ்நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா, தெஹ்ரானில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக நகரம் விலகுமாறு எச்சரித்துள்ளது.

மத்திய தெஹ்ரான் பகுதியில் உள்ள 3.3 லட்சம் பேர் வெளியேறுமாறு இஸ்ரேலும் முன்னதாக அறிவித்துள்ளது. இதில் அரசு தொலைக்காட்சி, காவல்துறை தலைமையகம் ஆகிய முக்கிய கட்டடங்கள் உள்ளன.

இந்திய தூதரகம், நகரில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுவரை 110 பேர் ஆர்மீனிய எல்லையை கடந்துள்ளனர் என்று தகவல்.

Exit mobile version