டவுன் பஸ்சுக்கு பதில் ‘பச்சை’ நிற வெளியூர் பஸ்கள் திருவாடானையில் குழப்பத்தில் பயணிகள்

திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் வழக்கமான நகரப் பேருந்துகளுக்கு (டவுன் பஸ்) பதிலாக வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்துகளை அடையாளம் காண முடியாமல் கிராமப்புறப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவாடானை பணிமனையை மையமாகக் கொண்டு திருவெற்றியூர், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், காரங்காடு, ஆண்டாவூரணி மற்றும் தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் தினமும் ஏராளமான நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுவாக, தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் நகரப் பேருந்துகள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறக் கலவையில் இருப்பதால், படிப்பறிவு இல்லாத முதியவர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் நிறத்தை வைத்தே தங்களது ஊருக்குச் செல்லும் பேருந்துகளை எளிதில் அடையாளம் கண்டு ஏறுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் திருவாடானை பகுதியில் டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன. இதற்கு மாற்றாகப் போக்குவரத்துத் துறை நிர்வாகம், வெளியூர் வழித்தடங்களில் இயக்கப்படும் பச்சை நிறப் பேருந்துகளை நகரப் பேருந்து வழித்தடங்களில் இயக்கி வருகிறது. நேற்று முன்தினம் திருவாடானையிலிருந்து திருவெற்றியூர் செல்லும் வழித்தடத்தில் வழக்கமான டவுன் பஸ்சுக்குப் பதில் பச்சை நிற மாற்றுப் பேருந்து இயக்கப்பட்டது.

பச்சை நிறப் பேருந்துகள் பொதுவாக விரைவுப் பேருந்துகளாகவோ அல்லது வெளியூர் செல்லும் பேருந்துகளாகவோ இருக்கும் என்பதால், பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் இது தங்களது ஊருக்குச் செல்லும் பேருந்துதான் என்பதை அறியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் பேருந்து நிலைய ‘டைம் கீப்பர்’ சத்தமிட்டுச் சொன்ன பிறகே, அது திருவெற்றியூர் செல்லும் பேருந்து என்பதைத் தெரிந்துகொண்டு பயணிகள் அவசரமாக ஓடிச் சென்று ஏறினர்.

இது குறித்துப் பயணிகள் கூறுகையில், “எங்களுக்கு ஊர் பெயர்களைப் படித்துப் பார்ப்பதை விடப் பேருந்தின் நிறத்தை வைத்து ஏறுவதுதான் பழக்கம். டவுன் பஸ் நிறத்தில் வராததால் வெளியூர் பஸ் என்று நினைத்து விட்டுவிட்டோம். பழுதான பேருந்துகளுக்குப் பதில் மாற்றுப் பேருந்துகளை இயக்கும்போது, முன்பக்கத்தில் பெரிய அளவில் ஊர் பெயர்களைத் தெளிவாக எழுத வேண்டும் அல்லது அதே நிறத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

பணிமனைகளில் போதிய பராமரிப்பு இல்லாததால் டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மாற்றுப் பேருந்துகளை இயக்கும் சூழல் ஏற்படும்போது பயணிகளுக்கு முறையான அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version