கோவை ஈஷா யோக மைய வளாகத்தில் சத்குரு அகாடமி சார்பில் உலகத்தரம் வாய்ந்த தலைமைத்துவ பயிற்சியான ‘பிராண்ட் இன்சைட்’ (Brand Insight) நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்கி மார்ச் 1-ஆம் தேதி வரை மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மூன்று நாள் தொடர் நிகழ்வின் தொடக்க உரையாற்றிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ‘மேட் இன் பாரத்’ என்ற முத்திரை குத்தப்பட்ட பொருட்கள் உலக சந்தையில் தரம் மற்றும் நம்பிக்கையின் உச்சமாகத் திகழ வேண்டும் என்றும், அத்தகைய வலிமையான பிராண்டுகளை இந்தியத் தொழில்முனைவோர் உருவாக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். நாட்டின் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பிராண்டிங் துறை நிபுணர்கள் பங்கேற்ற இந்த அமர்வில், ‘பாரதம்’ என்ற தேசியப் பிராண்டின் வலிமை குறித்தும் அதன் உலகளாவிய தாக்கம் குறித்தும் சத்குரு விரிவாகப் பேசினார். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் இந்தியப் பாஸ்போர்ட்டிற்கு வெளிநாடுகளில் கிடைத்து வரும் கூடுதல் மரியாதையே ஒரு நாட்டின் பிராண்ட் கட்டமைப்பிற்குச் சான்று என்றும், இது இன்னும் பல மடங்கு உயர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாரதத்தின் தேசியப் பிராண்ட் ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும் போது, அதனுடன் தொடர்புடைய அனைத்து உள்நாட்டு வணிக நிறுவனங்களுக்கும் சர்வதேச சந்தையில் கதவுகள் எளிதாகத் திறக்கும் என்றார். யோகாவை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், அதன் பலன்கள் உலகளாவியவை என்றாலும், நீண்ட காலமாக அது சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்றும், அதனை மாற்ற முயலும் போது விமர்சனங்கள் வருவது இயல்பு என்றும் தெரிவித்தார். ‘விழிப்புணர்வுடன் கூடிய பிராண்டிங்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 2023-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தலைமைத்துவப் பயிற்சியில், ஒரு பிராண்டை வெற்றிகரமாக உருவாக்குவதற்கான நவீன யுக்திகள், நுணுக்கங்கள் மற்றும் கருவிகள் குறித்து நேரடிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு பயிற்சியில் ‘ஸ்டார்ம் தி நார்ம்’ நிறுவனத்தின் சி.இ.ஓ அனிஷா மோத்வானி தலைமையிலான நிபுணர்கள் குழுவுடன், ‘ஸ்டோரிவாலாஸ்’ நிறுவனத்தின் அமீன் ஹக், ‘டிஸ்ரப்ஷன் கன்சல்டிங்’ கிருஷ்ணன் சுப்ரமணியன், ‘பிளிப்பர் கன்சல்டிங்’ ராகுல், ஓகில்வி நிறுவனத்தின் சோனல் தப்ரால் மற்றும் டென்ட்சு தெற்காசியாவின் தலைவர் நாராயண் தேவநாதன் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
