நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மூலப்பள்ளிப்பட்டியில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற கிரீன் வேர்ல்டு எக்செல் சிபிஎஸ்சி (Green World Excel CBSE) பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழாவிற்கு, பள்ளி சேர்மேன் வருதராஜன் தலைமை தாங்கினார். பள்ளி பொருளாளர் ஆர்.திருமூர்த்தி, இயக்குநர்கள் தனசேகரன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னதாக, பள்ளி முதல்வர் ஸ்ரீப்ரவிணா அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அறிவியலின் இன்றியமையாமையை வலியுறுத்தினார்.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி கே.இளங்கோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களின் அறிவியல் கண்காட்சியைத் திறந்து வைத்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் ஆற்றிய எழுச்சியுரை வருமாறு:
“மாணவர்கள் தங்கள் வாழ்வில் விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத தன்னம்பிக்கை ஆகிய மூன்றையும் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும். வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் சாதனைகள் செய்யும் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்களாகிய நீங்கள் சாதனை படைத்தால் மட்டுமே இந்தியா உலக அரங்கில் வல்லரசாகும். உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையத்தில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றுவது நமது நாட்டிற்குப் பெருமைக்குரிய விஷயம். உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நீங்கள் சாதித்தால் மட்டுமே வரலாற்றில் நிலைத்து நிற்க முடியும். ஏழ்மையிலிருந்து எழுந்து வந்து உலகையே வியக்க வைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் தொழில்நுட்ப உலகின் உச்சத்தைத் தொட்ட கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை போன்றோரை முன்னுதாரணமாகக் கொண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும்” என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
இந்த அறிவியல் கண்காட்சியில், எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு வியக்கத்தக்க அறிவியல் மாதிரிகள் மற்றும் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக விண்வெளி ஆய்வு, சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகள் அனைவரையும் கவர்ந்தன. மாணவர்களின் ஒவ்வொரு படைப்பையும் சிறப்பு விருந்தினர் கே.இளங்கோ மற்றும் ஆசிரியர்கள் நேரில் பார்வையிட்டு, அவற்றின் செயல்முறை விளக்கங்களைக் கேட்டறிந்தனர். மாணவர்களின் புதுமையான சிந்தனைகளைப் பாராட்டிய விஞ்ஞானி, அறிவியல் ஆர்வத்தைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தினார். பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனுக்கு ஒரு சிறந்த களமாக அமைந்தது.
