காசா போர் நிறுத்த தீர்மானத்தில் வாக்களிக்க மறுத்த இந்தியா – என்ன காரணம் ?

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு கவனிக்கத்தக்கதாக மாறியது.

காசா பகுதியில் போர் நிறுத்தம் குறித்து ஸ்பெயின் முன்வைத்த தீர்மானம் மீது ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், இந்தியா உள்பட 19 நாடுகள் வாக்களிக்க மறுத்தன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு, கடந்த காலத்தில் இருந்து மாற்றம் காண்பதாகவே கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் நான்கு தீர்மானங்களில் மூன்றில் இந்தியா வாக்களிக்கவில்லை. ஆனால், 2024 டிசம்பர் 13 அன்று காசா பகுதியில் போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தில் மட்டும் இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தது.

இந்த முறை, தீர்மானத்தில் வாக்களிக்காமல் இருக்க இந்தியா எடுத்த முடிவிற்கு காரணம் குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பரவதனேனி ஹரிஷ் விளக்கம் அளித்தார். “காசாவில் நிலவும் நெருக்கடி மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தைகள் மற்றும் ராஜதந்திர முயற்சிகள் மூலம் மட்டுமே நிலையான அமைதி ஏற்படுத்த முடியும் என்பதே இந்தியாவின் நிலைபாடாகும்” என்று அவர் கூறினார்.

Exit mobile version