திருவாரூர் : “தமிழகத்தில் பா.ஜ. தலைமையிலான கூட்டணியின் ஆட்சி அமையப்போகிறது. இந்த கூட்டணியின் தலைமையில் இ.பி.எஸ். தான் முதலமைச்சராக இருப்பார்,” என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருவாரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
“தமிழகத்தில் எங்களுக்கு கூட்டணி கட்சிகளின் ஆட்சி ஏற்படும். அந்த கூட்டணியின் முதலமைச்சர் இ.பி.எஸ். தான். இதற்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.”
“எந்தக் கட்சிக்கு லாபம், எந்தக் கட்சிக்கு நஷ்டம் என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரிய வரும். ஆனால் அனைவரும் ஒரே அணியில் திரளவேண்டும் என்பதே என் மனநிலை,” என்றார் அவர்.
அத்துடன், தே.மு.தி.க.வையும் கூட்டணியில் இணைவது மிக முக்கியம் எனவும், அப்போது தான் தி.மு.க.வை எதிர்த்து வெற்றி பெற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நான் பார்க்கும் பார்வை, நீங்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் மக்கள் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைதல் தேவை,” என அவர் கூறினார்.
அமித்ஷா தெரிவித்த கருத்தையும் மேற்கோளாக தெரிவித்த அவர், “எங்கள் கூட்டணியில் இ.பி.எஸ். தலைமையிலான ஆட்சி அமையும்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதையும் நினைவூட்டினார்.
“எங்கள் கோரிக்கை எளிமையானது – அனைவரும் ஒன்றாக சேர வேண்டும்,” என தனது முடிவுரை வழியாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.