வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, தற்போது தேர்தல் நடக்க உள்ள பீகார் மாநிலத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர், மத்திய அரசு கொடுக்கும் பல நெருக்கடிகளை தாண்டி தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அட்மினிஸ்ட்ரேஷன், ஆட்சி என்றால் என்ன என்பது கூட தெரியாதவர்கள் புதிதாக வந்து எதையெதையோ பேசுகின்றனர் இவர்கள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்ய முடியாது என நெல்லையில் நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளின் திமுக பாக முகவர்கள் கூட்டம் நெல்லை மாவட்டம் செங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் கிரகம்பெல் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஓரணியில் தமிழ்நாடு , 2026 தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர். கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி
திமுக பல போராட்டங்களைக் கடந்து இந்த நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் இருக்கக்கூடியவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இயக்கத்தின் தலைவர்களை கொண்டிருக்க கூடிய இயக்கமாக பாஜகவின் அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய முதலமைச்சரை தலைவராக கொண்டுள்ள இயக்கத்தை நாம் பெற்று இருக்கிறோம் .
இந்த நாடே நம்மை பார்த்து பிரமிக்க கூடிய ஒரு போர் குணத்தோடு திமுக இருந்து கொண்டிருக்கிறது. ஓர் அணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொழி சார்ந்த பிரச்சனைகள் உருவாக்கப்பட்டுள்ளது . கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று தமிழ்நாட்டின் வரலாற்று பெருமைகளை எல்லாம் மத்திய அரசு மறைத்து மறுதலிக்க துணிந்து உள்ளது.
அதுமட்டுமல்லாமல் புதிய கல்விக் கொள்கை என்பதைக் கொண்டு வந்து அடக்கிட நினைக்கிறது. ஹிந்தியை கொண்டு வந்து கல்வித்திட்டத்தில் திணித்து நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் கேள்விக்குறியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் இருந்து வருகிறது.
தமிழ்நாடு வளரும் மாநிலமாக மாறிவிடக்கூடாது அதனை முடக்க வேண்டும் என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் அத்தனை சவாலையும் தாண்டி ஒரு சிறப்பான ஆட்சியை தமிழக முதலமைச்சர் கொடுத்து வருகிறார். அட்மினிஸ்ட்ரேஷன் என்றால் என்ன, ஆட்சி அதிகாரம் என்றால் என்ன என்று தெரியாமல் புதிதாக வந்து எதை வேண்டுமானாலும் பேசி வருபவர்களால் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்யமுடியாது.
அதே நேரத்தில் யார் தமிழ்நாட்டை தமிழ் மக்களை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களோடு கூட்டணியில் இருக்கக்கூடிய அதிமுக போன்ற கட்சிகளை நிச்சயமாக அவர்களுடைய துரோகத்தை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பாக ஓரணியில் தமிழ்நாடு என்பதை பயன்படுத்திட வேண்டும்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லிக் கொண்டு வருகிறோம் இந்த தேர்தலில் கட்டாயம் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் பாஜக தான் போட்டியிடக்கூடிய ஒவ்வொரு தேர்தலையும் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது. டெல்லியில் முதலமைச்சர் போட்டியிடும் தொகுதியில் இதனை செய்தார்கள்.
பீகாரில் தற்போது இந்த குளறுபடியை பாஜக செய்து வருகிறது வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களை சரி பார்க்க வேண்டியது இந்த தேர்தலில் கட்டாயம் நியாயமாக நேர்மையாக இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் நமக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர் அவர்கள் நியாயமாக வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த திமுக நிர்வாகிகளை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை காட்சி நகர் தனியார் ஹோட்டலில் நடந்த நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிப் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் தொகுதி பார்வையாளர்கள் சுரேஷ்ராஜன், ஜோசப்ராஜ், சிவராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஞானதிரவியம், பிரபாகரன், சித்திக், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோஷல், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி, தமயந்தி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.