ரோம்: உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மக்களிடம் பேரதிர்ச்சியும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியது. ஏப்ரல் 26-ஆம் தேதி அவரது உடல் ரோமில் மண்ணில் சமபடுத்தப்பட்டது. இறுதிச்சடங்கில் அமெரிக்கா, உக்ரைன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள 252 கார்டினல்களில், 80 வயதிற்கு குறைவான 136 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 4 கார்டினல்களும் அடங்கியுள்ளனர். மே 7-ஆம் தேதி ரோமில் நடைபெறும் கார்டினல்களின் ரகசிய மாநாட்டில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்நிலையில், புதிய போப்பை தேர்வு செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த நகைச்சுவையான பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ”நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என அவர் கூறினார். மேலும், ”போப் பிரான்சிஸுக்குப் பதிலாக யார் இருக்க வேண்டும்” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “நியூயார்க் வெளியே உள்ள ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்” என்றார்.
டொனால்டு ட்ரம்பின் இந்த கலகல பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.