பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..
இந்தியன் ரிசர்வ் வங்கி பிப்ரவரி 9ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதி வரை பாதுகாப்பான நிதி பயன்பாடு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு பேரணியாகச் சென்றனர். வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய இந்தப் பேரணியானது மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று புதிய ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் ( கேஒய்சி அவேர்னஸ் ) வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுதல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கேஒய்சி சம்பந்தப்பட்ட என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பது குறித்தும், வங்கி கணக்கில் பெயர் மாற்றுதல் மற்றும் மற்ற வங்கி பரிவர்த்தனைகளை சிரமம் இல்லாமல் பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் முதுநிலை மண்டல மேலாளர் நாகராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரெங்கநாத பிரபு, நிதி பயன்பாட்டு ஆலோசகர் முத்துராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
