ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர். மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் அவர்கள் வாசிக்க, அனைவரும் திரும்பச் சொல்லி மனித உரிமைகள் குறித்த உறுதிமொழியை ஏற்றனர். அந்த உறுதிமொழியின் முக்கியச் சாராம்சம் பின்வருமாறு:
“இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளையும் மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யமாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.” மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பல்வேறு அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
