சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில், ஆளுனர் ஆர்.என்.ரவியை, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். அப்போது, நகராட்சி துறை, பத்திரப்பதிவு, தொழில்துறை, கனிமவளம், சுகாதாரத்துறை, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஊழல் நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்களை ஆளுநரிடம் அவர் புத்தகமாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 56 மாத திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில், ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடனே திமுக செயல்படுத்தியிருக்கலாம். ஆனால், தற்போது தேர்தலுக்காக மாணவர்களின் வாக்குகளை பெறவே மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறை கூறினார். இதே போன்று சட்டமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறவே, பொங்கல் பண்டிகைக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
