தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து, விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறி இருப்பது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரப்பிரதேசத்தை விட, கடன் அதிகமாக வாங்கிய மாநிலம் தமிழ்நாடு என்று,
காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, அண்மையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவருக்கு எதிராக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும், பிரவீன் சக்கரவர்த்தியை விமர்சித்த திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக, மதிமுக, இடதுசாரிகளின் தலைவர்களை, அவர் கடுமையாக சாடியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்து, தற்போது எக்ஸ் தளத்தில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். அதில், யாருக்கு வாக்கு? – ஐ.பி.டி.எஸ் தரவு சொல்லும் தகவல் என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை, ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.
அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெறும் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான நேரம் மட்டுமல்ல, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான நேரமும் வந்துவிட்டதாக, மாணிக்கத் தாகூர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
