அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால், அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பிக்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை. மற்றவர்கள் வழக்கில் வந்தே பாரத் ரயில் போல் வேகம் காட்டப்படுகிறது எனக் கூறியதுடன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக மத்திய அரசின் அனுமதிபெற லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது.