விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் ஆகியோர், 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில், போலந்தைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கேட்டி மெக்னலி உடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில், செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் டேன் எவான்ஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எவான்ஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.