விம்பிள்டன் டென்னிஸ்-சபலென்கா, டெய்லர் ஃபிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில், பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா, ஜெர்மனியின் லாரா சிக்மெண்ட் உடன் மோதினார். இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில், உலகின் நம்பர் 5 வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், ரஷ்யாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என முதல் இரு செட்களை வென்றார். 3-வது செட்டை 1-6 என இழந்தார். இறுதியில் 4-வது செட்டை 7-6 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Exit mobile version