திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில், ‘திராவிடர் தளம்’ என்ற அமைப்பினர் இந்து மதம் மற்றும் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் நோட்டீஸ்களை விநியோகித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எதிராகச் செயல்படும் இந்த அமைப்பு இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தவறான மற்றும் விஷமக் கருத்துகளை விதைப்பதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பல்லடத்தில் உள்ள மணிவேல் மஹாலில், கடந்த டிசம்பர் 5-ம் தேதி தொடங்கி இமைகள் ரோட்டரி சங்கம், பல்லடம் நகராட்சி மற்றும் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இந்தக் கண்காட்சியில், ‘கருஞ்சட்டை பதிப்பகம்’ அமைத்திருந்த அரங்கில் தான் இந்தச் சர்ச்சைக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த அரங்கில் இருந்த ஒருவர், ‘திராவிடர் தளம்’ என்ற பெயரில், ‘பக்தியுள்ள மாணவர்களுக்கு சில கேள்விகள்’ என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகித்துள்ளார். இதில், இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் இந்த நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவல் அறிந்ததும், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாகப் புத்தகக் கண்காட்சியை முற்றுகையிட்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே இந்து அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்து பரிவார் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் சாய் குமரன் அவர்கள் கூறுகையில், “புத்தகக் கண்காட்சியில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் புத்தகங்களை விற்பனை செய்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், பொதுமக்கள் பலரும் பங்கேற்கும் இத்தகைய பொது இடத்தில், குறிப்பிட்டு இந்து மதத்தையும், மத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் விதமாக நோட்டீஸ்களை அச்சடித்து விநியோகிப்பதை ஏற்க முடியாது. இது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டவர்கள் மீது, நாங்கள் அளித்துள்ள சரியான ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், விரைவில் இந்து அமைப்புகளைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என்று எச்சரித்துள்ளார்.
‘திராவிடர் தளம்’ என்பது ‘திராவிட மாணவர் கழகம்’ என்ற பெயரிலும் செயல்படுகிறது. கடவுள் மறுப்புக் கொள்கையை முன்னிறுத்தும் இந்த அமைப்புக்கு நிரந்தர நிர்வாகிகள் என்று யாரும் இல்லை என்றும், ‘தேவைப்பட்டால் அமைப்பின் பெயரைக் கூட மாற்றிக்கொள்வோம்’ என்று சமூக வலைதளப் பக்கத்தில் தாங்களே குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹிந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு போன்ற விவகாரங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இந்த அமைப்பின் கூட்டங்களில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுப் பேசுவது தெரியவந்துள்ளது.
இந்த அமைப்பின் உண்மையான நோக்கம், ‘மூட நம்பிக்கைகளை ஒழிப்பது’ என்ற பெயரில் இந்து மதத்தையும், இந்துக்களின் நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவது மட்டுமே என்பதை பல்லடத்தில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ் முழுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவர நடத்தப்படும் பொதுவான கண்காட்சிகளைப் பயன்படுத்தி, மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் விதமாக, தங்கள் மோசமான எண்ணங்கள் மற்றும் விஷமக் கருத்துகளை இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விதைக்க இந்த அமைப்பு முயற்சிப்பதாகவும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. புத்தகக் கண்காட்சியை நடத்திய இமைகள் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் அவர்கள் விளக்கமளிக்கையில், “மத நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டுதான் அனைத்து மதத்தினருக்கும் கண்காட்சியில் கடைகள் ஒதுக்கினோம். கண்காட்சி தொடங்குவதற்கு முன்பே, சமுதாயத்தைச் சீர்குலைக்கும் வகையில் யாரும் செயல்படக் கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், எங்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்து அவர்கள் இந்த நோட்டீஸை விநியோகித்துள்ளனர். தெரிந்திருந்தால் நாங்களே உரிய நடவடிக்கை எடுத்திருப்போம். இனி இதுபோன்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்,” என்று உறுதியளித்தார்.
முறைப்படி புகார் அளிக்கப்பட்ட பின்னரும், நோட்டீஸ் விநியோகத்திற்குக் காரணமானவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கைப் பேணும் வகையில் காவல்துறை இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு, மத நல்லிணக்கத்தைக் குலைக்க முயன்றவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பொறுத்தே, இந்து அமைப்புகளின் எதிர்கால நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














