காரைக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அங்கு முருகன் வழிபாடு நடத்த அனுமதி கோரியும் இந்து முன்னணியினர் கையில் வேலுடன் வந்து கமிஷனரிடம் மனு அளித்ததால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 2-வது போலீஸ் பீட் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற நிலம் உள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் பயன்பாடு பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி இடத்தில் வேல் பிரதிஷ்டை செய்து முருகனை வழிபட அனுமதி கோரியும் இந்து முன்னணி சார்பில் நேற்று நூதனப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலாளர் அக்னிபாலா தலைமையில், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையில் வேலுடன் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். அவர்கள் மேயர் முத்துத்துரை மற்றும் கமிஷனர் சங்கரன் ஆகியோரைச் சந்தித்து மனு அளிக்க முற்பட்டனர். அப்போது, கமிஷனரின் அறைக்கு வெளியே காத்திருக்குமாறு அலுவலக ஊழியர்கள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர், “வெற்றிவேல்.. வீரவேல்..” என அதிரடியாகக் கோஷமிட்டனர். தங்களைச் சந்திக்கக் கமிஷனர் மறுப்பதாகக் கூறி அவர்கள் அலுவலக வளாகத்திலேயே முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தனது அறைக்கு வரவழைத்த கமிஷனர் சங்கரன், கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டார். மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களை உடனே வெளியே செல்லுமாறு கமிஷனர் கூறியதால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. “மக்களின் கோரிக்கையைக் கேட்க வேண்டிய அதிகாரி எங்களை அலட்சியப்படுத்துகிறார்” என இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர்.
சம்பவம் குறித்துப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி கமிஷனர் சங்கரன், “மாநகராட்சிக்குச் சொந்தமான பொது இடங்களைத் தனிப்பட்ட வழிபாட்டிற்கோ அல்லது மற்ற பயன்பாட்டிற்கோ சட்ட விதிமுறைகளை மீறி வழங்க முடியாது. அதே சமயம், குறிப்பிட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக அவர்கள் அளித்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்,” என்று உறுதியளித்தார்.













