தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் பல மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியே இதற்குக் காரணமாகும் என கூறப்பட்டுள்ளது.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும், வரவிருக்கும் நாட்களில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரம் அதிகரிக்கும் எனவும், இதன் விளைவாக மாநிலம் முழுவதும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக கொட்டிய மழையால், ஆண்டிப்பட்டி நகரின் குமுளி–மதுரை தேசிய நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், வைகை சாலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ராமநாயக்கன்பாளையம், கொத்தாம்பாடி, கல்பகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், தங்கள் வயல்களில் டிராக்டர்களை இயக்கி உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.