லக்னோ : உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக, மாநிலம் முழுவதும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீர் வானிலை மாற்றம் காரணமாக பல மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. குறிப்பாக காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நொய்டா உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள், போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் மற்றும் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை தீவிரமாக மேற்கொள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்னல், புயல் அல்லது கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண நிதி வழங்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.