ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் கோபி மேற்கு ஒன்றிய அலுவலகத் திறப்பு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்த தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் தேர்தலில் தவெக தலைமையிலான கூட்டணியில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதைத் தலைவர் விஜய் அவர்களே இறுதி செய்வார் என்றும், அது குறித்துப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் விஜய் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத் திட்டம் முடிவானதும், அதற்கான களப்பணிகள் மிகத் தீவிரமாகத் தொடங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
தனது பழைய கட்சியான அதிமுகவின் தற்போதைய செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய செங்கோட்டையன், “நான் அதிமுகவில் இருந்தபோது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் எங்கே இருந்தன, நான் குரல் கொடுத்த பிறகு அவை எங்கே இடம்பெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பேனர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடியின் படமும், மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் படமும் மட்டுமே உள்ளன. கட்சியின் முகங்களாக இருந்த தலைவர்களின் படங்களையே பயன்படுத்தாதவர்கள், எந்த முகத்தை வைத்து மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து மேலும் விமர்சித்த அவர், ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாவட்டச் செயலாளரைக்கூட நியமிக்க முடியாமல், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து வந்து மாவட்டச் செயலாளராகப் பணியமர்த்த வேண்டிய அவல நிலையில் அதிமுக இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (இன்று) வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியின் அடையாளங்கள் குறித்தே கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
