நல்லமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு மீண்டும் அரசு பேருந்து சேவை தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சியின் எல்லையோர கிராமமான நல்லமநாயக்கன்பட்டி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்திற்கு மீண்டும் அரசு டவுன் பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் – குண்டாம்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்ட இந்த அரசு பேருந்து, கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகத் திடீரென நிறுத்தப்பட்டது. தொற்று பாதிப்புகள் நீங்கி இயல்பு நிலை திரும்பிய பின்னரும், இந்தப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படாததால் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், வெளியூர்களுக்குச் செல்லவும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று பிரதான சாலையை அடைய வேண்டிய இக்கட்டான சூழல் நிலவி வந்தது.

இந்த அவல நிலை குறித்து நாளிதழ்களில் விரிவான செய்திகள் வெளியாகி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்குச் சென்றது. மக்களின் இன்னல்களைக் கருத்தில் கொண்டு, நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை உடனடியாக மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் திண்டுக்கல் குண்டாம்பட்டி பேருந்து, நல்லமநாயக்கன்பட்டி கிராமத்திற்குள் சென்று வரும் வகையில் தனது சேவையை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய பேருந்து சேவையின் தொடக்க விழாவிற்கு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் தலைமை தாங்கி, பேருந்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கிராமத்திற்குள் பேருந்து நுழைந்ததைக் கண்ட பொதுமக்கள், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் எரியோடு பேரூராட்சித் தலைவர் முத்துலட்சுமி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகளான கவிதா, ரவிசங்கர், கார்த்திகேயன், செந்தில்குமார் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம் மாணவர்களின் கல்விப் பயணமும், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தடையின்றித் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து இயக்கப்படுவதைக் போக்குவரத்துத் துறையினர் உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தங்களது கிராமத்திற்குப் பேருந்து வசதி கிடைத்துள்ளதால், நல்லமநாயக்கன்பட்டி கிராமமே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

Exit mobile version