திருச்செந்தூர் :
நடிகரும் சமூக ஊடக பிரபலமுமான ஜி.பி.முத்து மற்றும் அவரது ஊரான பெருமாள்புரம் கீழத்தெரு மக்களுக்கிடையே ஏற்பட்ட பதற்றமான நிலை இன்று அதிகாரிகள் நடத்திய சமாதானக் கூட்டத்தால் முடிவடைந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், “என் வீடு செல்லும் கீழத்தெரு வழி காணவில்லை” என்று ஜி.பி.முத்து அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர் ஊர் மக்களையும், கோயிலையும் அவதூறாக பேசியதாக கூறி, மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலசுந்தரம் தலைமையில் இன்று (15-05-2025) சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில், “என் வீட்டிற்கு செல்லும் வழியை சட்டப்படி உறுதி செய்து தரவேண்டும்” என ஜி.பி.முத்து கேட்டுக் கொண்டார். இதை ஏற்று அதிகாரிகள், குறித்த பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்தப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எந்த விதமான ஆக்கிரமிப்பும் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், கோயில் கட்டமைப்புகள் சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இனி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், சட்ட ஒழுங்கை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும், மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். இதை இருபுறமும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டனர்.
இதன் மூலம், பல நாள்களாக நிலவி வந்த சிக்கல் இன்று அதிகாரிகளின் சமாதான முயற்சியால் முடிவுக்கு வந்தது.