அய்யலூர் மலையோர கிராமங்களின் இருள் அகல விடிவெள்ளி இலவச  சோலார் விளக்குகள்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள மம்மானியூர், ஊரானூர், பஞ்சம்தாங்கி புதூர், புத்தூர், பிச்சம்பட்டி, பூசாரிபட்டி, மலைப்பட்டி மற்றும் ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட மலையோரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள், நீண்ட காலமாகக் குறைந்தபட்ச மின்சார வசதி கூட இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, மாலை நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் மாணவர்களின் கல்வி மற்றும் பெண்களின் வீட்டு வேலைகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக காசா பவுண்டேஷன் (CASA Foundation) சார்பில் இலவச வீட்டு உபயோக சோலார் விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாகாநத்தத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கொம்பேறிபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கி, பயனாளிகளுக்குச் சோலார் உபகரணங்களை வழங்கினார். இசை நிறுவன ஆலோசகர் சின்னையா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 65 ஏழ்மையான குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அதிநவீன சோலார் பேனல் மற்றும் விளக்குகள் வழங்கப்பட்டன. இதன் சிறப்பம்சமாக, பகல் நேரத்தில் சூரிய ஒளி மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு, இரவு நேரத்தில் வீடுகளில் இரண்டு மின்விளக்குகளை எரிய வைக்க முடியும். மேலும், தகவல்தொடர்புக்கு அவசியமான அலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளதால், மின்சார இணைப்பு இல்லாத மலைக்கிராம மக்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த ஆக்கப்பூர்வமான சமூகப் பணியினை ‘இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம்’ மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது.

இந்த விழாவில் எச்.டி.எப்.சி (HDFC) வங்கி கள அலுவலர் கார்த்திக், வட்டார இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் சின்னையா மற்றும் சமூகப் பணியாளர்கள் கார்த்திகா, வீரமணி, உமாமகேஸ்வரி, வெண்ணிலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, இத்திட்டம் தொடர வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினர். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் இரவு நேரத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், இந்தச் சோலார் விளக்குகள் மக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் உதவியாக இருக்கும் எனப் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். கிராமப்புற மேம்பாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முயற்சியைப் அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version