மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரை நூற்றாண்டைக் கடந்தும் முறையான சொந்தக் கட்டிடம் இன்றி இயங்கி வரும் அரசு கிளை நூலகத்தால், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் நூலக நடைபாதையில் அமர்ந்து படிக்கும் அவல நிலை நீடிப்பதால், புதிய கட்டிடம் கட்ட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சோழவந்தான் இரட்டை அக்ரஹாரப் பகுதியில் கடந்த 67 ஆண்டுகளாக ஒரே வாடகைக் கட்டிடத்தில் இந்த நூலகம் இயங்கி வருகிறது. மிகவும் பழமையான இந்தக் கட்டிடம் குறுகலாக இருப்பதோடு, போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதி இன்றி உள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை டி.என்.பி.எஸ்.சி (TNPSC), வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகும் மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். ஆனால், நூலகத்திற்குள் அமர இடமில்லாததால், வேறு வழியின்றி வாசலிலும், நடைபாதையிலும் அமர்ந்து படிக்கும் சூழல் நிலவுகிறது.
இது குறித்து வேதனையுடன் பேசிய மாணவர்கள் மலர்க்கொடி, கங்கேஸ்வரி மற்றும் சுல்தான், “வீட்டில் படிப்பதைக் காட்டிலும் நூலகத்தில் குழுவாகப் படிப்பது எங்களுக்குப் பெரும் ஊக்கமாக உள்ளது. இங்குத் தேர்வுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் உள்ளன. ஆனால், அமர்ந்து படிக்கத் தேவையான நாற்காலிகள் இருந்தும், அவற்றைப்போட இடவசதி இல்லை. குறிப்பாகக் கழிப்பறை வசதி இல்லாதது மாணவிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அரசு உடனடியாகப் புதிய கட்டிடத்தை அமைத்துத் தந்தால் எங்கள் எதிர்காலத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தனர்.
நூலகத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “நூலகக் கட்டிடம் கட்டத் தேவையான நிதி தயாராக உள்ளது. ஆனால், பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கும் இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஊருக்கு வெளியே இருந்தால் அது யாருக்கும் பயன்படாது. சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் எதிரே உள்ள பழைய வானொலி பூங்கா நிலத்தில் சுமார் 10 சென்ட் இடம் உள்ளது. தற்போது அங்கு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அந்த இடத்தை நூலகத்திற்கு ஒதுக்கிக் கொடுத்தால், இங்கிருக்கும் இரண்டாம் நிலை நூலகத்தை முதல் நிலை நூலகமாகத் தரம் உயர்த்தவும் வாய்ப்புள்ளது” என்றனர்.
இது குறித்துப் பேரூராட்சி அதிகாரிகள், “புதிய நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இடப் பிரச்சனை தொடர்பாக உரிய ஆய்வு செய்து, கூடிய விரைவில் நூலகக் கட்டிடம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளனர். தமிழக அரசு அறிவுசார் மையங்களை உருவாக்கி வரும் வேளையில், 67 ஆண்டுக்கால சோழவந்தான் மக்களின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

















