விருதுநகர் மாநாட்டிற்கு மதுரையிலிருந்து ஐயாயிரம் போர்வீரர்கள்: இளைஞரணி அதிரடி வியூகம்!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள தென் மண்டல திமுக இளைஞரணி மாநாட்டைச் சரித்திர நிகழ்வாக மாற்றும் வகையில், மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முத்தப்பன்பட்டியில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்ற, கழக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தென் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை சுமார் ஒன்றரை லட்சம் இளைஞரணி வீரர்கள் வெண்சீருடை அணிந்து பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட மாநாட்டில், மதுரை தெற்கு மாவட்டத்தின் பங்களிப்பு குறித்து விரிவான ஆலோசனைகள் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டன.

மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிச் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதுரை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் பேருந்துகள் மற்றும் வேன்களில் உரிய நேரத்தில் அணிவகுத்துச் சென்று, மாநாட்டைச் சிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் முன்னிலை வகிக்க, துணை அமைப்பாளர்கள் பா.சுரேஷ், ந.ஜெகநாதன், ஜோ.காளிதாஸ், அ.ஆதவன் அதியமான், அ.சாதிக் மொகைதீன், வி.ஜெகதீஷ் மற்றும் அ.ராஜதுரை ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளையும் சேர்ந்த அனைத்து நிலை இளைஞரணி நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டு மாநாட்டிற்கான தயார் நிலை குறித்து விவாதித்தனர்.

இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர்கள் மதன்குமார், நாகராஜன், பாண்டியன், தனசேகரன், ஆலம்பட்டி சண்முகம், பெரியசாமி, சுதாகரன், முத்துராமன், ஜெயச்சந்திரன், முருகன், செல்வபிரகாஷ், பழனி, அஜித்பாண்டி மற்றும் திருமங்கலம் நகர் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பேரூர் கழகச் செயலாளர்கள் வருசை முகமது, முத்துகணேசன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பரமசிவம், ஜெயச்சந்திரன், சிவனேசன் ஆகியோருடன் திருமங்கலம் நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார், வழக்கறிஞர்கள் கவிஸ்ரீதினேஷ், அழகுமலை, மொச்சிகுளம் ஆர்யா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் நிரஞ்சன், முத்து மற்றும் சூரிசுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மாநாட்டிற்கான உறுதிமொழியை ஏற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் விருதுநகர் மாநாட்டிற்கு மதுரையிலிருந்து ஒரு பெரும் இளைஞர் பட்டாளமே திரண்டு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version