மதுரை : மதுரை மாநகரில் அரசு பேருந்தில் முதல் முறையாக பெண் நடத்துநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் முருகேஸ்வரி என்ற பெண். இது அந்தப் பகுதியில் பெண்களின் முன்னேற்றத்தில் புதிய வரலாற்றுப் படியாக அமைகிறது.
மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (வயது 35), தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது தந்தை சங்கர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் திருப்புவனம் பகுதியில் நடத்துநராக பணியாற்றி வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு பணிக்காலத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தந்தையின் மறைவுக்குப் பின்னர், கருணை அடிப்படையில் வாரிசு நியமனம் மூலம், 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முருகேஸ்வரி மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியமர்ந்தார். தொடக்கத்தில் திருப்பாலை பகுதியில் பணியாற்றிய அவர், தற்போது மதுரை மாட்டுத்தாவணி முதல் பெரியார் பேருந்து நிலையம் வரையிலான பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.
“பெண்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்”
“பெண் என்பதால் பயப்பட வேண்டியதில்லை. துணிச்சலுடன் செயல்பட்டால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். ஆண்கள் செய்கிற பணி என ஒதுக்காமல், அனைவரும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வது எனக்கு நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கிறது. என் அப்பா செய்த வேலையை நான் செய்வது மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது,” என முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே நடத்துநராக பணியாற்றும் சூழலில், மதுரையில் பெண் நடத்துநராக முருகேஸ்வரி பணியாற்றும் நிகழ்வு பெண்கள் பயணிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது சாதனை மதுரை மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது.
முருகேஸ்வரி மாதிரியான பெண்கள் இன்னும் பலர் சாதிக்கத் தைரியமாக முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.