விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தால், ஏரியில் வளர்ந்த விழல்கள் மற்றும் செடி கொடிகள் தீக்கிரையாகின. இதில் பல உயிரினங்களும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பைபாஸ் சாலையோரம் அமைந்துள்ள முத்தாம்பாளையம் ஏரியில் மாலை 6 மணியளவில் திடீரென தீப்பற்றியது. காற்று வேகமாக வீசியதால், தீ வேகமாக பரவி ஏரியின் ஒரு பகுதிக்கு முழுவதுமாக பரவியது.
இதனால், அருகே உள்ள சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இரவு 8 மணிவரை தீ எரிந்துகொண்டிருந்தது.
தகவல் பெற்ற தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மர்ம நபர்கள் தீ வைத்திருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பசுமையாக இருந்த ஏரியின் இயற்கை அழகு நாசமாகியுள்ளது. மேலும், விழல்களோடு பல உயிரினங்களும் தீவிபத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.