மா விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்) அறிவித்துள்ளார்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நெல், கரும்புக்குப் பின் அதிக பரப்பளவில் மா மற்றும் தென்னை பயிரிடப்படுவதாகவும், இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 35,000 ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தியாகிறது. அதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் மாம்பழக் கூழ் தயாரிக்க பயன்படுகிறது.
ஆனால், இந்த ஆண்டில் மாங்காய் விலையிலும் மாம்பழக் கூழ் தயாரிப்பு கொள்முதல் விலையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பல மா விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவசாயிகள் கோரிக்கைகள் :
மாம்பழத்திற்கான கொள்முதல் விலை கிலோக்கு ₹13 வழங்க வேண்டும்
பாதிக்கப்பட்ட விவசாயர்களுக்கு ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு வழங்க வேண்டும்
மாம்பழக் கூழுக்கான GST விகிதம் 12% லிருந்து 5% ஆக குறைக்க வேண்டும்
இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினாலும் இதுவரை எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதனை எதிர்த்து, அ.தி.மு.க. சார்பில் 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிருஷ்ணகிரி பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்துக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தலைமை வகிக்கவுள்ளார்.